2013ம் கல்வியாண்டில் இந்திய ஐ.ஐ.எம்.,களில் 115 இடங்கள் புதிதாக
சேர்க்கப்பட்டிருந்தாலும், இந்தாண்டு கேட் தேர்வுக்கு பதிவு செய்தவர்களின்
எண்ணிக்கை கடந்தாண்டை விட குறைந்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டில் பதிவு
செய்தோர் எண்ணிக்கை 2.14 லட்சம். ஆனால், இந்தாண்டு பதிவு செய்தோர் 1.94
லட்சம் பேர் மட்டுமே. ஒட்டுமொத்தமாக, 9% வரை எண்ணிக்கை குறைந்துள்ளது.
அதாவது, கடந்த 5 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், இந்த 2013ம் ஆண்டின் பதிவு
செய்தோர் எண்ணிக்கை மிகவும் குறைவு.
தமிழகத்தை மட்டும் எடுத்துக்கொண்டால், கடந்தாண்டு பதிவுசெய்தோர் 13,121
பேர். ஆனால் இந்தாண்டு 12,348 பேர் மட்டுமே பதிந்துள்ளனர். ஒட்டுமொத்த
அளவில் இது 6% குறைவாகும்.
அதேபோன்று, குறைந்த பணி அனுபவம் உடையவர்கள் மற்றும் எந்த பணியனுபவமும்
இல்லாதவர்கள் என்ற வகைப்பாட்டில், கடந்தாண்டு கேட் தேர்வெழுத 68% பேர்
பதிவு செய்திருந்தார்கள். ஆனால் இந்தாண்டு அது 66% என்ற அளவில்
குறைந்துவிட்டது.
இந்தாண்டு, கேட் தேர்வு எழுத பதிவுசெய்தோரில் மராட்டிய மாநிலத்தவரே
அதிகம். அதற்கடுத்து, உத்திரபிரதேசம், டெல்லி, ஆந்திரா ஆகிய மாநிலங்கள்
வருகின்றன. தமிழ்நாட்டிற்கு 5வது இடம் கிடைத்துள்ளது.
இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுவதாவது: உலகளாவிய அளவில், பணவீக்கம்
உள்ளிட்ட பொருளாதார மந்தநிலை நிலவுவதால், பெரியளவில் பணி வாய்ப்புகள் இல்லை
என்று இளைய தலைமுறையினர் நினைக்கின்றனர். இதனால், பலருக்கு மேலாண்மை
படிப்பில் ஆர்வம் எழுவதில்லை.
மேலும், புதிதாக ஐ.ஐ.எம்.,கள் திறக்கப்பட்டதால், ஐ.ஐ.எம்.,களில்
படிக்கப்படும் மேலாண்மைப் படிப்பை பற்றிய பிம்பம், மாணவர்கள் மத்தியில்
தனது மதிப்பை சற்று இழந்துள்ளது. மேலும், பலருக்கு வெளிநாட்டிற்கு சென்று
எம்.பி.ஏ., படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்து வருகிறது.
இதுதவிர, ஆன்லைன் முறையிலான எம்.பி.ஏ., படிப்பில் சேர்க்கைப் பெறும்
மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment